இந்தியாவின் 72-ஆவது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, இன்றைய குடியரசு தின நிகழ்வில் பிரிட்டன் பிரதமர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தபோதும் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் நெருக்கடி காரணமாக அவர் பங்கேற்றவில்லை. எனினும் குடியரசு தினத்தை ஒட்டி அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ராஜபாத்தில் இடம்பெறும் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்வையிட 25,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, போரில் உயிரிழந்த இந்திய படையினருக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதன்போது அவருடன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தும் உடனிருந்தார்.
ராஜ்பாத்தில் பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடந்து அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
இந்திய முப்படைகளின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு இடம்பெற்றது. ரபேல், ஜாகுவர், மிக்-29 ஆகிய விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன.
டெல்லி குடியரசு தின விழாவில் பங்களாதேஸ் இராணுவத்தினர் 122 பேர் பங்கேற்ற அணிவகுப்பும் இடம்பெற்றது. பங்களாதேஸ் தனி நாடாக உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நாட்டு இராணுவத்தினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.1971-இல் இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு பங்களாதேஸ் என்ற புதிய நாடு உதயமானது குறிப்பிடத்தக்கது.